பதிவு செய்த நாள்
30
மே
2022
10:05
மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலமாதலால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. மேலும் இத்தலத்தில் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக அபிராமி அம்மன் அமாவாசை பவுர்ணமி ஆகிய நிகழ்வும் நடந்துள்ளது. இக்கோவிலில் 60, 70, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் பீமரத சாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை தரிசிக்க நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு இன்று மாலை 80 வயதை அடைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியம் முழங்க கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவில் கொடிமரம் அருகே இளையராஜா கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார். தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நாளை காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால சதாபிஷேக பூஜைகள் நடத்தப்படுகின்றன. ராமலிங்க குருக்கள் தலைமையில் 21 சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரிணி, சகோதரர் கங்கை அமரன், அவரது மகன் ராம்ஜி, பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.