பதிவு செய்த நாள்
17
ஜூன்
2022
10:06
கோவை : நள்ளிரவில் கோவில் அருகில் நடமாடிய சிறுத்தை வீடியோ வெளியானதால், வனத்துறை கெடுபிடி காரணமாக, மருதமலை கோவில் நடை திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது; இதனால் வெகுதுாரத்திலிருந்து வரும் வெளியூர் பக்தர்கள் ஏமாற்றமடைகின்றனர்.
கோவை மருதமலை சுப்ரமணியர் கோவிலை சுற்றிலும் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், காட்டு யானை, சிறுத்தை, கரடி உட்பட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்கின்றன. அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையிலும், படிக்கட்டுகளிலும் இரவு நேரங்களில் வன உயிரினங்கள் நடமாடுவது வழக்கம்.கொரோனா பாதிப்பு காரணமாக, பல மாதங்கள் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாதபோது, கோவில் பகுதியில் வன உயிரினங்கள் நடமாட்டம் அதிகமானது. அதற்கு முன்பு வரை, இரவு 9:00 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு விலக்கப்பட்ட பின், மீண்டும் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போது, காட்டு யானைகள் நடமாட்டத்தைக் காரணம் காட்டி, கோவில் நடை திறப்பு நேரம், ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது.கோவில் நடை மூடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே, அடிவாரத்திலிருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால் இரவு 7:30 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்படாமலிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதியன்று, அதிகாலை 3:45 மணியளவில், மலையில் கோவிலுக்கு அருகில் சிறுத்தை ஒன்று நடமாடியது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ, எப்படியோ வெளியாகி, பல்வேறு வாட்ஸ்ஆப் குரூப்களிலும் வலம் வந்தது.இதை காரணம் காட்டி, இரவு 7:00 மணியுடன் கோவில் நடையை மூடுவதற்கு கோவில் நிர்வாகத்திடம் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இரவு 7:00 மணிக்கே கோவில் நடை மூடப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, அடிவாரத்தில் பிளக்ஸ் பேனரில் வைக்கப்பட்டுள்ளது.இந்த விஷயம் தெரியாமல், வெகுதொலைவிலிருந்து வரும் வெளியூர் பக்தர்கள் பலரும், ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, வனத்துறை அறிவுறுத்தலின்பேரில்தான், கோவில் நடை திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டுகளின் வழியே பக்தர்களை அனுமதிக்காமல், இரவில் வாகனங்களில் மட்டும் அனுமதிப்பதற்கு, மேலும் ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டு, வனத்துறைக்குக் கோரிக்கை விடுக்கப்படும் என்றனர்.