பதிவு செய்த நாள்
13
ஜூலை
2022
03:07
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி நான்கு லட்ச ஜபங்களுடன் கூடிய 1008 கலசாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் துவங்கியது.
ஏழு நாட்கள் ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடந்து 1008 கலசாபிஷேகம் ஜூலை 19ல் நடைபெற உள்ளது. இன்று காலை 9:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக பூர்வாங்க பூஜைகள் துவங்கின. கொடிமரத்திருகே அறங்காவலர்கள் கண்டனூர் கருப்பஞ்செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சுப்பிரமணியன் செட்டியார் முன்னிலையில் சிவாச்சார்யர்கள் பிச்சைக்குருக்கள் மற்றும் சோமசுந்தர குருக்கள் சங்கல்பம் பூஜைகள் நடத்தினர். பின்னர் மூலவர் தரிசனம் நடந்து அனுக்ஞை பெறப்பட்டது. தொடர்ந்து புனித கலசத்துடன் புறப்பாடாகி ஹோம மண்டபம் சென்றனர். அங்கு சிவாச்சார்யர்களால் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் ஸ்ரீதர் சிவச்சார்யரால் கலச புறப்பாடாகி மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாளை காலை 9:00 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமமும் , மாலை 4:00 மணிக்கு பிரவேச பலி, ரஷோக்ன ஹோம்ம் நடைபெறும். நாளை காலை 8:30 மணிக்கு நவக்கிரக ஹோமம், அஸ்த்ர மந்திர ஜெபமும், மாலை 4:00 மணிக்கு வாஸ்துசாந்தியும்நடைபெறும். ஜூலை 16 மாலையில் யாகசாலையில் 1008 கலசங்கள் நிறுவிய பின் முதற்கால பூஜையும், ஐந்தாம் நாளில் 2,3ம் கால யாகசாலை பூஜைகளும், ஆறாம் நாளில் 4, 5ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறும். ஏழாம் நாளான ஜூலை 19 ல் காலை 11.00 மணிக்கு நான்கு லட்ச ஜப ஹோமம் நிறைவாகி கற்பகப் பெருமானுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.