பதிவு செய்த நாள்
14
ஜூலை
2022
11:07
ஸ்ரீபெரும்புதுார்: குன்றத்துார் தாலுகாவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள பல கோவில்களை புனரமைத்து, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும்; ஒருவேளை பூஜையாவது செய்ய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில் மாங்காடு காமாட்சி அம்மன், குன்றத்துார் சுப்பிரணிய சுவாமி கோவில் மற்றும் நவக்கிரகங்களில் சூரியன், சந்திரன், ராகு, புதன், சுக்கிரன், கேது ஆகிய கிரக தலங்களும், ஏராளான சிவன், பெருமாள் கோவில்களும் உள்ளன.
பெரிய புராணத்தை இயற்றிய தெய்வப்புலவர் சேக்கிழார், குன்றத்துாரில் அவதரித்தவர். இப்படி பல்வேறு சிறப்புகளை உடைய குன்றத்துார் ஒன்றியத்தில், பழமையான சில கோவில்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. இந்த கோவில்களை, ஹிந்து அறநிலையத் துறையினர் புனரமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாலீஸ்வரர் கோவில்: படப்பை அருகே, நாட்டரசன்பட்டு ஊராட்சி, சிறுவஞ்சூர் கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் இடிந்து காணப்படுகிறது. அம்மன் சன்னிதி மேல் செடிகள் வளர்ந்துள்ளன.கோவிலை சுற்றியுள்ள மதில் சுவர், இடியும் நிலையில் உள்ளது. சிவ பக்தர்கள் இணைந்து, பூஜை செய்து வருகின்றனர். கோவிலுக்குசொந்தமான ஏராளமான நிலங்கள் குத்தகைதாரர்களின் வசம் உள்ளன.
பெருமாள் கோவில்: குன்றத்துார் தாலுகா, படப்பை அருகே ஒரத்துாரில் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் என, இரு கோவில்கள் உள்ளன. இந்த இரண்டு கோவில்களிலும், பராமரிப்பு என்பதே கிடையாது. கோவில் கோபுரம் சேதமடைந்து காணப்படுகிறது.அறநிலையத் துறையினர் இந்த கோவிலை கண்டுகொள்ளாத நிலையில், அப்பகுதி மக்கள் ஏற்பாட்டில் ஒரு கால பூஜை மட்டும் கோவிலில் செய்யப்படுகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலங்கள் குத்தகைகாரர்களிடம் சிக்கியுள்ளன.
ஆதி திருவாலீஸ்வரர் கோவில் : குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தின் கீழ், ஆதி திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் பகுதிகள் இடிந்து விழுந்து சிதிலமடைந்து உள்ளன. இந்த கோவிலை சுற்றி ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.கோவிலை சுற்றி உள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன. இந்த கோவிலை சீரமைத்து, வரலாற்று தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும் என, சிவபக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இவை மட்டுமின்றி, குன்றத்துாரில் ஒன்றியத்தில் ஏராளமான கோவில்கள் சீரமைக்கப்படாமல் வீணாகி வருகின்றன. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டு, ஏலம் விட்டு கிடைக்கும் வருவாயில், கோவில்களில் பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரியமாணிக்க பெருமாள் கோவில்: குன்றத்துார் தாலுகா, அமரம்பேடு ஊராட்சியில் பழமை வாய்ந்த கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், பல ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது. ஒரு கால பூஜைகள்கூட செய்யாமல், கோவில் மூடியே உள்ளது.கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், குத்தகைகாரர்களின் பிடியில் உள்ளன. பழமையான இந்த கோவில் கோபுரத்தின் மீது மரங்கள் வளர்ந்துள்ளதால், இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஏகாம்பரநாதேஸ்வரர் கோவில் : படப்பை அருகே, செரப்பணஞ்சேரி ஊராட்சி நாவலுார் கிராமத்தில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதேஸ்வரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததால், கோவில் கட்டடங்கள் சிதிலமடைந்து வருகின்றன. கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் தனியார் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவில் அருகே உள்ள பழமையான பாலசுப்பிரமணியர் கோவிலும் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
விமீஸ்வரர் கோவில்: படப்பை அருகே செரப்பணஞ்சேரியில், இடிந்த நிலையில் பழமையான விமீஸ்வரர் கோவில் உள்ளது. துாங்கானை மாடக் கோவில் வகையில், காஞ்சிபுரம் மாமல்லபுரம் இடையில் 18ம் கோவிலாக இத்தலம் கணக்கிடப்பட்டுள்ளது.இந்த கோவிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஹிந்து அறிநிலையத் துறையினர் இக்கோவிலை கண்டு கொள்வதில்லை. சிவ அடியார்கள் சிலர் இணைந்து, இக்கோவிலை பராமரித்து பூஜை செய்து வருகின்றனர்.