அச்சிறுப்பாக்கம்: அறப்பேடு கிராம ஆதி பொன்னியம்மன் கோவில் தேரோட்டம், சிறப்பாக நடந்தது.
அச்சிறுப்பாக்கம் அடுத்த அறப்பேடு கிராமத்தில், பழமையான ஆதி பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, இம்மாதம் 6ம் தேதி துவங்கியது.இதன் தேரோட்டம் நேற்று நடந்தது. கிராமமக்கள் வழங்கிய 300 புடவைகளால் தேருக்கு கூரை வடிவமைக்கப்பட்டு, சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. அதன் பின், தேரில் ஆதி பொன்னியம்மன் எழுந்தருளினார்.கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் வலம் வந்தது. வழி நெடுக, மக்கள் ஆரத்தி எடுத்தும், நேர்த்தி கடன்களை செலுத்தியும் அம்மனை தரிசனம் செய்தனர். வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.