பதிவு செய்த நாள்
11
ஆக
2022
07:08
செய்யாறு: செய்யாறு அருகே, தினமும் கோவிலில் பூஜை முடிந்ததும் பிரசாதம் கேட்டு வாங்கி சாப்பிட்டு செல்லும் காகத்தை, மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, உக்கம்பெரும்பாக்கம் கிராமம் அருகே கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர், தாரை சமேத தேவகுரு, பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது பகவான் மற்றும், 27 நட்சத்திர அதிதேவதைகளுடன், கடந்த, 2014ம் ஆண்டு, சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர், கோவில் கட்டி பூஜை செய்து வந்தார். அவர், கடந்த, 2018ல் சித்தியடைந்தார். அவரது மறைவிற்கு பிறகு, கோவில் பூஜை நேரத்திற்கு, காகம் ஒன்று தினமும் வர தொடங்கியது. அர்ச்சகர் நெய்வேத்திய பிரசாதத்தை ஒரு இலையில் வைத்து கொடுக்க ஆரம்பித்தார். காகம் பயமின்றி அவரிடம் பெற்று சாப்பிட ஆரம்பித்தது. அன்று முதல் தற்போது வரை அக்காகம், பூஜை முடியும் நேரத்திற்கு வந்து பிரசாதத்தை கேட்டு வாங்கி சாப்பிட்டு வருகிறது. முக்தியடைந்த சித்தர் சுவாமிகள் காகம் ரூபத்தில் வந்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினரும் பொதுமக்களும் கருதுகின்றனர். இந்த நிகழ்வை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டு மனம் நெகிழ்ந்து செல்கின்றனர்.