குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் சக்தி கோயிலில் பால்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2022 08:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் ஆதி நாகாத்தம்மன் சக்தி கோயில் உள்ளது.இக்கோயிலில் வருடம் தோறும் நடைபெறும் பால்குட விழா சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் இக்கோயிலில் பால்குடம் எடுப்பதாக வேண்டி பால்குடம் எடுத்து வந்து கோயிலை அடைந்து நேர்த்திக் கடன் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. வருடம் தோறும் நடைபெறும் இந்த கோயிலில் பால் குட விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டிக்கொண்ட ஒன்பதாம் நாளான நேற்று பக்தர்கள் குமிளங்காடு கிராமத்தில் உள்ள கோட்டை ஐயா கோயிலிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தனர். பக்தர்கள் அலகு காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் தேவேந்திரஅடிகளார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.