பதிவு செய்த நாள்
23
ஆக
2022
04:08
கோவில்பாளையம்: கோவில்பாளையத்தில் தமிழ்ச் சங்க விழா நடந்தது. கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய நிகழ்வு, கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது.
தன்னம்பிக்கை பேச்சாளர் காந்தி தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழர்கள் எந்த கலையை கற்றாலும், அதில் ஆழமான நுட்பங்களையும், வழிமுறைகளையும் தெரிந்து வெற்றி பெறுவர். ஆடம்பரத்தையும், தற்பெருமையும் விரும்பாத, தமிழன், யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம், என்னும் முறையில், அனைத்து கலைகளையும் உலகத்திற்கு கொடுத்துள்ளான். உலகம் போற்றும் யோக கலையை உலகிற்கு தந்த பதஞ்சலி முனிவரும் தமிழரே, உலகப் பொதுமறையான வள்ளுவத்தை தந்தவர் தமிழரான வள்ளுவரே,‘ என்றார். ’படித்ததில் பிடித்தது’ என்னும் தலைப்பில் தமிழ் ஆசிரியர் முனியாண்டியும், ’அறிவோம் ஒரு அரிய செய்தி’ என்கிற தலைப்பில் பானுமதியும், ’யாமறிந்த புலவரிலே’ என்னும் தலைப்பில் குடியாத்தம் குமணனும் பேசினர். ’திருவாசகம் என்னும் தேன் துளி’ என்னும் தலைப்பில் மாரப்பன் பேசினார். தமிழறிஞர்கள் குறித்து பேச்சாளர்கள் பேசினர், பட்டிமன்றம் நடந்தது. திரளான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.