தேவகோட்டை: தேவகோட்டை அருகே கன்னங்கோட்டை நாச்சியார்புரம் ஜெக மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா கடந்த 15ல காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒரு வாரம் தினமும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சங்காபிஷேகம், விளக்கு பூஜை, பூச்சொரிதல் நடந்தது. நேற்று பக்தர்கள் பால்குடம், அக்னி காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தேவகோட்டை ராம்நகர் சுயம்பு புத்து ராஜ நாகேஸ்வரி கோவில் திருவிழா ஒரு வாரம் நடந்தது. தினமும் அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. பூச்சொரிதலை தொடர்ந்து நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீமிதித்து நாகேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் திருவிழாக்களில் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்து வழிபட்டனர்.