பதிவு செய்த நாள்
31
ஆக
2022
10:08
மதுரை : திருச்செந்துார் கோவில் தரிசனம் மற்றும் திரிசுதந்திரர்களை முறைப்படுத்த அறநிலையத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது. கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்த, இடையூறு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்ய, கமிஷனர் சுதந்திரமாக முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது.
திருச்செந்துார் ஸ்ரீ ஜெயந்திநாதர் திரிசுதந்திரர்கள் காரியஸ்தர் ஸ்தானிகர் சபா செயலர் நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக அறநிலையத்துறை கமிஷனர் ஏப்.,1ல் பிறப்பித்த உத்தரவுக்கு தடை வேண்டும் என கோரினார்.அந்த மனுவை ஏப்., 28ல் நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்து, கூடுதல் நீதிபதிகள் அமர்வு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.நிர்மல்குமார் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: இந்த நீதிமன்ற அமர்வு, 2018ல் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி நிலைக்கத் தக்கதல்ல. அதன் அடிப்படையில், அறநிலையத்துறை கமிஷனர் தொழில்நுட்பக் காரணங்கள் அடிப்படையில் அவசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒரு தரப்பிற்கு எதிராக புகார் வந்தால், அதை சட்டத்திற்கு உட்பட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் தரப்பிடம் விளக்கம் கோர நோட்டீஸ் அளிக்கவில்லை. கமிஷனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இந்த கோவிலுக்கு உலகின் பல நாடுகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். பொதுநலன் கருதி இக்கோவிலின் நிர்வாகத்தை முறைப்படுத்த, இடையூறு இன்றி பக்தர்கள் தரிசனம் செய்ய சுதந்திரமாக முடிவெடுக்க கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது.அதன் அடிப்படையில் அவர் பரிசீலித்து புதிதாக தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.