பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
தஞ்சாவூர், திருவையாறு அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு, மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக, மூம் மதத்தினரும் பங்கேற்ற விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேலதிருப்பந்துருத்தி, புஷ்பவனேஸ்வரர் கோவில் பகுதியில், மூம்மூர்த்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு, மேல திருப்பந்துருத்தி பேரூராட்சி துணைத் தலைவர் அகமது மைதீன், கீழ திருப்பந்துருத்தி பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் ,பா.ஜ.க., அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் சிவகுமார் ஆகியோர், விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்து, ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என பகுபாடு இல்லாமல், அனைவரும் ஒத்துமையாக, சகோதரத்துவத்துடன் என்றும் இருக்க வேண்டும் என மதநல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மதநல்லிணக்க ஊர்வலத்தில் மும்மூர்த்தி விநாயகர் கோவில் உற்சவ விநாயகர் எலி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவில் வளாகத்தை வந்தடைந்தது. முன்னதாக மும்மூர்த்தி விநாயகர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு, அருகம்புல், எருக்கம் பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.