பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
மேட்டுப்பாளையம்: சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் இன்று துவங்குகிறது.
மேட்டுப்பாளையம், பவானி ஆற்றின் கரை ஓரத்தில், மிகவும் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 1984ம் ஆண்டு, கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. அதனால் கோவில் கோபுரங்கள், கட்டடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டன. அதனால் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தும்படி, பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பழைய கோவில் இடித்துவிட்டு, புதிதாக கோவில் கட்டும் பணிகள் துவங்கின. மூலவர் சன்னதியின் இருபக்கம், சிவன், அம்பாள் சன்னதிகளும், நவகிரகங்களும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், தியான மண்டபம் ஆகிய மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து திருப்பணிகளும் முடிந்த நிலையில், கடந்த ஓராண்டாக கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை, வருகிற, 5ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உள்ளது.
இதை அடுத்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாகசாலைகள் கட்டி முடிக்கப்பட்டன. இன்று காலை,9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், வாஸ்து பூஜையுடன், திருப்பணிகள் தூங்குகின்றன. 3ம் தேதி மாலை, 5:30 மணிக்கு முதற்கால யாக பூஜையும், தூங்குகிறது. நான்காம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜைகளும், அதைத் தொடர்ந்து புதிய சிலைகளுக்கு கண் திறப்பும், கோபுர கலசங்களும் அமைத்தல், கோ பூஜை தீபாரதனை ஆகியவை நடைபெற உள்ளது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும், வேத பாராயணம், நாடி சந்தானம், திருமுறை ஒப்புவித்தல் ஆகியவை நடைபெற உள்ளன. ஐந்தாம் தேதி காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், அதை தொடர்ந்து, 6:40 மணிக்கு தீர்த்த கலசங்கள் ஆலயத்தை வலம் வருதலும், பின்பு மூலவர் மற்றும் பரிவார விமானங்களுக்கும், ராஜகோபுரத்திற்கும், மூலவர் சுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், 7:00 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை துறையினரும், திருமுருக வழிபாட்டு பக்தர்கள் குழுவினரும் செய்து வருகின்றனர்.