பதிவு செய்த நாள்
21
ஆக
2012
02:08
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். இன்று பெரும்பாலோனோர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையால் சிரமப்படுகிறார்கள். சிலர் கோமா நிலையில் உள்ளனர். போதைக்கு அடிமையாகியுள்ள தங்கள் கணவரையும், பிள்ளைகளையும் மீட்க முடியாமல் பல பெண்கள் தவிக்கின்றனர். இவர்கள் நலம் பெற ஓதவேண்டிய பதிகம் இது.
1. துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றி முடித்துப்,
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ,
ஆரிடமும் பலி தேர்வர்;
அணிவளர் கோலம் எலாம் செய்து, பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ, மங்கையை வாட
மயல் செய்வதோ, இவர்மாண்பே?
2. கலைபுனை மான்உரி - தோல்உடை ஆடை,
கனல் சுடரால் இவர்கண்கள்,
தலைஅணி சென்னியர், தார்அணி மார்பர்,
தம்அடிகள் இவர் என்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்து அமர் பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ, ஏழையை வாட,
இடர் செய்வதோ, இவர்ஈடே?
3. வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சுஇருள்; மாலை
வேண்டுவர், பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடமாக
நண்ணுவர், நம்மை நயந்து
மஞ்ச அடைமாளிகை, சூழ்தரு பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச்
சிதை செய்வதோ இவர் சீரே?
4. கன மலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்து, அழகு ஆய
புனிதர் கொல்ஆம், இவர் என்ன,
வனம் மலி வண்பொழில் சூழ்தரு பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
மனம் மலி மைந்தரோ மங்கையை வாட
மயல் செய்வதோ, இவர் மாண்பே?
5. மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி
வளர் சடைமேல் புனல்வைத்து
மோந்தை, முழாக் குழல், தாளம் ஓர் வீணை
முதிர் ஓர் வாய்மூரி பாடி,
ஆந்தை விழிச் சிறு பூதத்தர், பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச்
சதுர் செய்வதோ, இவர் சார்வே?
6. நீறு மெய் பூசி, நிறை சடை தாழ,
நெற்றிக் கண்ணால் உற்றுநோக்கி
ஆறு அது சூடி, ஆடு அரவு ஆட்டி,
ஐவிரல் கோவண ஆடை
பால்தரு மேனியர், பூதத்தார், பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
ஏறுஅது ஏறியர், ஏழையை வாட,
இடர் செய்வதோ இவர் ஈடே?
7. பொங்க இள நாகம், ஏர் ஏகவடத்தோடு
ஆமை வெண்நூல், புனைகொன்றை
கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய,
குழகர் கொல் ஆம், இவர் என்ன
அங்கு இள மங்கை ஓர் பங்கினர்; பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச்
சதிர் செவதோ இவர் சார்வே?
8. ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து,
இராவண னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய், நடு ஆய
மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் எழில் பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச்
சிதை செய்வதோ, இவர் சேர்வே?
9. மேலது நான்முகன் எய்தியது இல்லை;
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியது இல்லை;
என இவர் நின்றதும் அல்லால்
ஆல்அது மாமதி தோய்பொழில் பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
பால்அது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வதோ, இவர் பண்பே?
10. நாணொடு கூடிய சாயினரேனும்
நகுவர், அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் நகையார்
உரைகள் அவை கொள வேண்டா;
ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சில்
ஆச் சிராமத்து உறைகின்ற
பூண்நெடு மார்பரோ, பூங்கொடி வாடப்
புனைசெய்வதோ, இவர் பொற்பே?
11. அகம்மலி அன்பொடு தொண்டர் வணங்க,
ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்து, அழகு ஆய
புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகைமலி தண் பொழில் சூழ்தரு காழி
நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவை ஏத்தச்,
சாரகிலா வினைதானே.