திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த மார்கழி, 1 முதல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கில புத்தாண்டையொட்டி, சம்பந்த விநாயகர் மற்றும் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து, நவக்கிரக சன்னதிகளில் நெய் தீபமேற்றி வழிபட்டு, கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில், பூத நாராயணன் கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், இஞ்சிமேடு சிவன் கோவில், படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.