திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2022 05:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச நிகழ்ச்சியாக தீர்த்த உற்சவம் நடந்தது. நவ.28ல் துவங்கிய விழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் புறப்பாடாகினர்.
தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு இன்று உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர், அஸ்தரதேவர் எழுந்தருளினர். நவ. 28 முதல் நடைபெற்று வந்த யாகசாலை பூஜை நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு வெள்ளி குடங்களிலிருந்த புனித நீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு அஸ்தரதேவர் பல்லக்கிலும், சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிம்மாசனத்திலும் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். ஆறுமுக சுவாமி சன்னதியில் யாக பூஜை முடிந்து சரவணப் பொய்கை தண்ணீரில் அஸ்தரதேவரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடந்தது.