பதிவு செய்த நாள்
20
டிச
2022
11:12
தமிழக அரசு வெளியிட்ட 2023ம் ஆண்டு அரசு விடுமுறை பட்டியலில் விநாயகர் சதுர்த்தி செப்.,17(ஞாயிறு) என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாங்கப்படி செப்.,18 அன்றுதான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும். அன்று தான் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
விநாயகருடன் ஏன் இப்படி தமிழக அரசு விளையாடுகிறது. ஹிந்து பண்டிகைகள் விடுமுறை தொடர்பாக ஏன் தன்னிச்சையாக தமிழக அரசு முடிவெடுக்கிறது என்று ஆதினங்கள், சிவாச்சாரியார்கள், ஜோதிடர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பஞ்சாங்கம் அடிப்படையில் நமது விழாக்கள்: திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள்:
2023 செப்., 18ம் தேதி திங்கள் புரட்டாசி மாதம் பிறக்கிறது. அன்று திரிதியை திதியுடன் சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மாலை நேரம் சதுர்த்தி இருப்பதால் அன்றைய தினமே அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவார்கள். பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பெரும்பாலும் நமது விழாக்கள் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 19ம் தேதி மதியம் வரை சதுர்த்தி உள்ளது.
2 நாட்களும் விடுமுறை விடலாம்: சூரியனார் கோயில் வாமதேவ சந்தானம் ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் திருமடம் ஆதினம் மகாலிங்க சுவாமிகள்: பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 2023 செப்.,18 அன்று காலை 11:38 மணிக்குத்தான் சதுர்த்தி வருகிறது. அன்று திரிதியை திதியுடன் சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் விநாயகரை வழிபடுவது சரியானதாக அமையும். அன்றைய தினமே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மறுநாள் 19ம் தேதி சதுர்த்தி இருப்பதால் ஒரு சிலர் அந்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகின்றனர். தமிழக அரசு செப்., 18 ஐ விநாயகர் சதுர்த்தி விடுமுறை என அறிவிக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை பக்தர்கள் மேற்கொள்ள ஏதுவாக செப்.,18, 19 ஆகிய 2 நாட்களும் விடுமுறை விட தமிழக அரசு முன் வரலாம்.
பாத்ரபதமாத சதுர்த்தி: மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்: ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி என்று கணக்கிடக்கூடாது. ஒரு ஆண்டின் 12 மாதங்களும் 2 வகையாக கணக்கிடப்படுகிறது. சூரிய சஞ்சாரத்தை வைத்து கணக்கிடப்படும் மாதங்களுக்கு சவுரமான மாதங்கள் என்று பெயர். இது சித்திரை முதல் பங்குனி முடிய உள்ள மாதங்கள். சந்திரனின் வளர்பிறை தேய்பிறை அடிப்படையில் அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி முதல் அமாவாசை வரையிலான நாட்களை சாந்திரமான மாதம் எனக் குறிப்பிடப்படுகிறது.
கோயில் உற்ஸவங்கள் பண்டிகைகள் சிவராத்திரி முதலியன சவுரமான மாதங்களின் அடிப்படையிலேயே கொண்டாட வேண்டும். நவராத்திரி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, விரதங்கள் எல்லாம் சாந்திரமான மாத அடிப்படையில் அனுஷ்டிக்க வேண்டும். சைத்ரம், வைசாகம் என இம்மாதங்கள் குறிப்பிடப்படுகின்றன. பாத்ரபதம் எனும் மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி, விநாயக சதுர்த்தி எனப்படுகிறது. இது சிலசமயம் ஆவணியிலும் சிலசமயம் புரட்டாசியிலும் வரும். அடிப்படை என்னவென்றால் ஆவணிமாத அமாவாசைக்கு மறுநாள் பாத்ரபத மாதம் பிறக்கிறது. மாதக்கடைசியில் இந்த ஆண்டு அமாவாசை வருவதால் புரட்டாசி முதல் தேதி சதுர்த்தி திதி வருகிறது. எனவே சவுரமான மாதமாகிய ஆவணியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பாத்ரபதமாத சதுர்த்தி என்பதை கவனத்தில் கொண்டால் எந்த குழப்பமும் வராது. அந்த வகையில் 2023ம் ஆண்டு புரட்டாசி மாதம் முதல் தேதி (செப்.,18) திங்களன்றே விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
ஹிந்துக்களை அவமதிக்கும் செயல்: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி விடுத்துள்ள அறிக்கை: 2023ம் ஆண்டுக்கான காலண்டர்கள் வெளியாகி வருகின்றன. இதில் பஞ்சாங்கம் அடிப்படையில், செப்., 18 திங்கள், விநாயகர் சதுர்த்தி என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் பொது விடுமுறை பட்டியலில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப்., 17 ஞாயிறு என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
விநாயகர் சதுர்த்தி என்பது ஹிந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானின் அவதார தினம். அது ஆவணி மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தினம். அதன்படி 2023ம் ஆண்டு ஆவணி அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சதுர்த்தியானது, செப்., 18 காலை 11:38 மணிக்கு தொடங்கி மறுநாள் செப்., 19 காலை 11:50 வரை உள்ளது.
ஹிந்துக்களின் மரபுப்படி இரவு நேரத்துக்கு பின்பு வரக்கூடிய மிச்ச நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படிப் பார்த்தால் செப்.,18 தான் விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொள்ளாமல் விநாயகர் சதுர்த்தி செப்.,17 என்று தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது கண்டனத்துக்கு உரியது. இது ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயல்.
ஒரு மதத்தின் பண்டிகையை அந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் ஆன்மிகப் பெரியோர்களும்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசு அல்ல. பிற மதங்களின் பண்டிகை நாட்களை அந்தந்த மத தலைவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அரசு அறிவித்த தேதி, அந்த மதத் தலைவர்கள் முடிவு செய்யும் தேதியுடன் மாறுபட்டால், அரசு அறிவித்த தேதியை மாற்றிக் கொண்டது உண்டு.
இந்த அடிப்படையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது விடுமுறை அறிவிப்பில் விநாயகர் சதுர்த்தியை, செப்., 18 என்று மாற்றி அறிவிக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க ஆதினங்கள், மடாதிபதிகள், ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும்.
ஆலோசித்து வெளியிடுவது நன்மை பயக்கும்: அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் துணைத்தலைவரும், தியாகராஜா ஜோதிட ஆராய்ச்சி மைய ஸ்தாபகருமான திருநள்ளாறு வேத சிவாகம ஜோதிட சாஸ்திர ரத்னாகரம் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார்: விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது ஹிந்துக்களின் மரபு. இப்போது திருதியை என்கின்ற ரீதியில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்., 18 புரட்டாசி 1ம் தேதி திங்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது சரியானதாக இருக்கும். அன்று காலையில் திருதியை சுமார் 11:30 மணிக்கு மேல் சதுர்த்தி தொடங்குவதால் அன்றே கடைப்பிடிப்பது சிறப்பாகும். விநாயகர் சதுர்த்தி அறிவிக்கின்றபோது, ஆதிசைவ சிவாச்சாரியார்கள், பஞ்சாங்க வெளியீட்டாளர்களை கலந்து ஆலோசித்து வெளியிடுவது நன்மை பயக்கும்.
இயந்திரம் போல் அரசு: துரை மாவட்ட வி.எச்.பி., தலைவர் சந்திரசேகரன்: விநாயகர் சதுர்த்தி ஹிந்துக்களின் நம்பிக்கையை பறைசாற்றும் விழா. கலாசாரத்தையும், பழக்க வழக்கத்தையும் தொன்று தொட்டு இந்த சதுர்த்தி திதியில் கொண்டாடுவது மரபு. ஆனால் தமிழக அரசு ஒட்டுமொத்த ஹிந்து மக்கள் அடையாளத்தை அழிக்கும் வகையில் செப்.,18க்கு பதில் செப்.,17ல் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என அறிவித்துள்ளது. அரசு ஒரு இயந்திரம் போல் செயல்படுகிறது. இது ஹிந்து மதத்தின் நம்பிக்கை, மரபுகளை அழிக்கும் செயல், வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆன்மிக உலகை அசைத்துப்பார்க்கும் செயல்: ஜோதிடர் சீர்காழி மு.திருஞானம்: எக்காலமும் பாத்ரபத மாதமான ஆவணி மாத அமாவாசை தினம் முடிந்த பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி. இம்முறை அதாவது வரும் சோபகிருது வருடத்தில் ஆவணி மாத வளர்பிறையில் சதுர்த்தி திதி வராமல் இருப்பதால், செப்., 17அன்று ஆவணி மாதமும் முடிவடைவதால் விநாயகர் சதுர்த்தியை ஆவணி மாத திருதியை திதியிலேயே அமைத்திருக்கிறார்கள். இது தவறு.
மாதம் மாறினாலும் பாத்ரபத மாதத்தொடர்ச்சியான புரட்டாசி 1ம் தேதி அதாவது, செப்., 18 அன்றுதான் முறையான விநாயகர் சதுர்த்தி. இதற்கு முந்தைய நாளான செப்., 17 அன்று விநாயகர் சதுர்த்தியாக அறிவித்திருப்பது ஆன்மிக உலகையே அசைத்துப் பார்க்கும் தமிழக அரசின் செயலாகவே தெரிகிறது.
-நமது நிருபர்-
தமிழகத்தின் பிரபல ஜோதிடர்கள் சிலர் கூறியதாவது:
அரசின் தவறு: திருக்கோவிலுார் பரணிதரன்: ஹிந்துக்களின் முதல் தெய்வம் விநாயகர். இவரால் அழிக்கப்பட்ட அசுரன் கஜ முகாசுரன். இவன் மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ கொல்ல முடியாதபடி வரங்கள் பெற்று மக்களுக்கு கொடுமைகள் செய்தான். இவனை அழிப்பதற்காக ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகமும், மனித உடலும் கொண்டு விநாயகர் அவதரித்தார்.இந்த நாளில் அவரை வழிபடுவோரின் தீவினை அழியும். வாழ்வில் நன்மைகள் பெருகும். பஞ்சாங்கத்தின் அடிப்படையில் செப்.18 அன்று காலை 11:38 மணிக்குத்தான் சதுர்த்தி பிறக்கிறது. மறுநாள் காலை 11:50 வரை சதுர்த்தி இருக்கிறது. நம் வழக்கப்படி இரவிற்கு பின்னர் வரும் மிச்சத்தை கணக்கில் கொள்வதில்லை என்பதால் செப். 18 அன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது பொருத்தமானதாகும்.ஆனால் இந்த நாளை இருட்டடிப்பு செய்து விட்டு, முந்திய நாளான செப்.17 அன்று விநாயகர் சதுர்த்தியாக தமிழக அரசு அறிவித்து விடுமுறை விட்டிருப்பது தவறான செயலாகும்.
புரட்டாசி 1 தான்: பெருங்குளம் ராமகிருஷ்ணன்: தமிழக அரசு 2023ம் ஆண்டின் விடுமுறை நாட்களில் செப்.17 அன்று விநாயகர் சதுர்த்தி என அறிவித்துள்ளது. ஆனால் பஞ்சாங்கப்படி புரட்டாசி 1 திங்கள், செப்.18 அன்று விநாயகர் சதுர்த்தி வருகிறது. பாத்ரபத மாதம் சதுர்த்தியன்று கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி. பாத்ரபத என்பது ஆவணி மாத அமாவாசைக்குப் பின்னர் பிறக்கும் மாதமாகும். இதில் சூரிய உதயத்தில் வரும் சதுர்த்தியே விநாயகர் சதுர்த்தி. இதில் சிலர் அஸ்த நட்சத்திரத்தை எடுத்துக் கொள்வர். ஆனால் விநாயகர் சதுர்த்தியைப் பொறுத்தவரை சதுர்த்தியை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் செப்.18, புரட்டாசி 1 திங்கள் அன்று தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும்.
செப். 18 தான் சரி: திருச்சி குட்டி சாஸ்திரி: விநாயக சதுர்த்தியானது பாத்ரபத மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி நாளில் கொண்டாடப்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள செப்.17 அன்று காலையில் வளர்பிறை திரிதியை தான் வருகிறது. சதுர்த்தி திதியின் சம்பந்தம் இல்லாததால் இந்நாளில் கொண்டாடுவது கூடாது. செப்.18, சோபகிருது வருடம் புரட்டாசி 1 திங்கள் அன்று காலை 11:38 மணிக்கு வளர்பிறை சதுர்த்தி ஆரம்பமாகிறது. இந்த நாளில் விநாயகர் சதுர்த்தியை நிர்ணயம் செய்வதே சரியான முறை.
ஜோதிட சாஸ்திரபடி: தினமலர் காலண்டர் ஜோதிடர் மு.நரசிம்ம ராகவன்: பஞ்சாங்கப்படி புரட்டாசி 1 திங்கள், செப்.18 அன்று விநாயகர் சதுர்த்தி வருகிறது. பாத்ரபத சுத்த சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் சதுர்த்தி திதி குறைந்தபட்சம் 15 நாழிகையாவது இருக்க வேண்டும். 2023 செப்.18 புரட்டாசி 1 திங்கள் அன்று திரிதியை திதியுடன் சதுர்த்தி வருகிறது. இந்த நாளில் விநாயகரை வழிபடுவதே ஜோதிட சாஸ்திர விதிகளின் படி நியாயமானதாக இருக்கும்.
சதுர்த்தி திதி இல்லாத நாள்: ஆற்காடு என்.ஆர்.மஹாலிங்க அய்யர்: பாத்ரபத மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதியானது மதிய நேரத்தில் இருக்கும் நாளில் கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி. இதன் அடிப்படையில் 2023 செப்.18, சோபகிருது வருடம் புரட்டாசி 1 திங்களன்று காலை 11:38 மணிக்குத் தான் சதுர்த்தி தொடங்குகிறது. இந்த நாளில் விநாயகரை வழிபடுவதே ஏற்புடையதாகும். ஆனால் சதுர்த்தி திதி இல்லாத செப்.17 அன்று தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி என அரசு விடுமுறை அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல.
செப். 18ல் மாற்றமில்லை: சிவகாசி தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர்: தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்காக மூன்று தலை முறையாக சரியாக கணித்துக் கூறிய ஜோதிடரிடமே 2023 ஆண்டின் விநாயகர் சதுர்த்திக்கான தேதி கணிக்கப்பட்டுள்ளது.இத்தனை ஆண்டுகளாக இது சரியானதாகவே உள்ளது. அதன்படி இந்த ஆண்டு செப். 18 விநாயகர் சதுர்த்தி என தீர்மானிக்கப்பட்டு சங்கத்தினரின் அனைத்து காலண்டரிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. செப். 18 தான் விநாயகர் சதுர்த்தி என்பதில் மாற்று கருத்து இல்லை.