பதிவு செய்த நாள்
31
டிச
2022
06:12
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோயிலில் ஜன., 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ரங்கநாதர் தாயார்களுடன் திங்கட்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் வழியாக பிரவேசிக்கிறார். இதைத்தொடர்ந்து, பல்வேறு அன்னதான குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் பெருமாள், எழுந்தருளி மண்டகப்படி பெற்றுக்கொள்கிறார். பின்னர், வசந்த மண்டபத்தில் பாலமலை ஸ்ரீ கிருஷ்ண லீலா பஜனை குழுவினரின் பஜனையும், பிருந்தாவன நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி, காலை, 9:00 மணி முதல் மாலை வரை அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள், பழைய புதூர் ஆதிமூர்த்தி பெருமாள், நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், திருமலை நாயக்கன்பாளையம், சின்னதடாகம், வரப்பாளையம், அத்திப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில்கள், இடிகரையில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவில், கோவிந்தநாயக்கன்பாளையம், சின்னவேடம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில்களிலும் அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், பஜனைகளுக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.