பதிவு செய்த நாள்
17
ஜன
2023
11:01
தஞ்சாவூர்: சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை இளைஞர்களிடம் அதிகளவில் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம் என மும்பை ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி அபரேஷானந்தா தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலுக்கு வருகை தந்த மும்பை ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி சுவாமி அபரோஷானந்தா, சேலம் சுவாமி சத்யேஸ்வரானந்தா, திருவண்ணாமலை சுவாமி மாத்ரு சேவானந்தா ஆகியோரை எம்.எல்.ஏ. அன்பழகன் வரவேற்று மரியாதை செய்தார். தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் உரையாற்றியதை நினைவு கூறும் விதமாக , புதிதாக நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அபரோஷானந்தா சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது; சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்திற்கு வந்த போது தான் எழுமின், விழிமின் என்ற அறை கூவல் விடுத்தார். தமிழக மக்கள் மீது மிகுந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கொண்டிருந்ததால் தான் அத்தகைய கருத்தை அவர் வெளிப்படுத்தினார்.
தமிழகத்தைச் சேர்ந்த பலரும் விவேகானந்தரின் கருத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை இளைஞர்களிடத்தில் அதிக அளவில் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். தேசபக்தியும், தெய்வபக்தியும் அவசியம் என்பதை வளரும் தலைமுறைக்கு கற்றுத் தர வேண்டியது அவசியம். அதற்கான செயல் திட்டங்களை பள்ளிப் பருவம் முதல் செயல்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி பாடங்களில் நன்னெறி வகுப்புக்கள் அவசியம் இடம்பெற வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன், கண்ணன், ரவி, பாலாஜி, சோழமண்டல விவேகானந்த சேவா சங்கத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.