பதிவு செய்த நாள்
03
மார்
2023
04:03
மேட்டுப்பாளையம்: குஞ்சப்பனை மகாமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில், குஞ்சப்பனை மகாமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் செய்து, புதுப்பிக்கப்பட்டன. விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டன. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த ஒன்றாம் தேதி மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மகா தீபாரதனையுடன் துவங்கியது. அன்று காலை, கோபுரக் கலசம், முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் ஆகியவற்றை, நாடார் காலனி செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து, ஊர்வலமாக அழைத்து வந்தனர். மாலையில், வாஸ்து சாந்தி பூஜையும், விநாயகர் பூஜையும், முதல் கால யாக பூஜையும் நடந்தன. இரண்டாம் தேதி காலை, திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை செய்தனர். பின்னர் கோபுர கலசம் அமைத்து, பரிவார் மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. மாலை மூன்றாம் கால யாக வேள்வி பூஜையும், மகா மாரியம்மனுக்கு, 1008 சகஸ்ர நாம அர்ச்சனையும், தீபாரத்தனையும் நடந்தது. இரவு குஞ்சப்பனை மகா மாரியம்மனுக்கும், ஆதிமூலவருக்கும் யந்திர ஸ்தாபனம், அஷட்பந்தன மருந்தும் சாத்தப்பட்டது. இன்று காலை, நான்காம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. பின்னர் நாடி சந்தானமும், யாக சாலையில் இருந்து, மூலவர் திருமேனிக்கு, அருள் சக்தியை நிறைவு செய்தனர். காலை, 7:30 மணிக்கு தீர்த்த கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து, கோபுர கலசத்திற்கும், மகாமாரியம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார் தெய்வங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை அஸ்வின் சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், 12 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.