அன்னூர்: பசூர், பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். பசூரில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் நடந்தன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 1ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் முதற்கால வேள்வி பூஜையும், 54 விதமான மூலிகைகளை வேள்வியில் சமர்ப்பித்தலும் நடந்தது. நேற்று முன் தினம் காலையில் இரண்டாம் கால பூஜை பூஜையும் கலசங்கள் நிறுவுதலும் நடந்தது. மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலையில் நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. யாகசாலையில் இருந்து மூலஸ்தானத்திற்கு புனித நீர் அடங்கிய குடங்கள் கொண்டு செல்லப்பட்டன. காலை 6:30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கும் காலை 8:30 மணிக்கு பத்ரகாளி அம்மன் மற்றும் மாகாளியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கூனம்பட்டி ஆதீன ஜகத்குரு ஸ்ரீமத் ராஜ் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் அருளாசி வழங்கினார். பசூர், அன்னூர், கோவையை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.