பதிவு செய்த நாள்
04
மார்
2023
01:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை விருஷபம் வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும் காமாட்சியம்மன் வீதியுலா வந்தார்.
தினமும் காலை, மாலையில், மகரம், சந்திர பிரபை, தங்க சிம்மம், யானை, தங்க சூரிய பிரபை, தங்க ஹம்ஸம், தங்க பல்லக்கு, முத்து சப்பரம், தங்க கிளி வாகனத்தில் உலா வந்தார். ஏழாம் நாள் உற்சவமான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய காமாட்சியம்மன் ராஜ வீதிகளில் பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் அம்மனை வழிபட்டனர். இதில், ஒன்பதாம் நாள் பிரபல உற்சவமான நாளை இரவு வெள்ளி ரதம் உற்சவம் நடக்கிறது. தேரோட்டத்தின்போது, மாநகராட்சி சார்பில், சாலையில் தண்ணீர் ஊற்றாததால், காலணி அணியாமல் வெற்று காலுடன் நடந்து சென்ற பக்தர்களும், சுவாமியை சுமந்து சென்றவர்களும், இசைக் கலைஞர்களும் வெயில் காரணமாக சூடான தரையில் நடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். எனவே, பகல் உற்சவத்தில், சுவாமி வீதியுலா செல்லும் சாலைகளில், குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், லாரி வாயிலாக சாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். lகாஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் கிராமத்தில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பிப். 25ம் தேதி காலை கொடி ஏற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் எழுந்தருளினார். இந்த பிரம்மோற்சவத்தின், 7வது நாளான நேற்று 8:30 மணிக்கு தேரில், அஞ்சனாட்சியுடன், மணிகண்டீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து, ஓம் நமசிவாய என, கோஷம் எழுப்பி தேரை இழுத்தனர்.