சாத்துார்: சாத்தூர் வெங்கடாஜலபதி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 9:30மணிக்கு நடந்தது. இதில் சாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சாத்துாரப்பன் என அழைக்கப்படும் சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.1990 ல் கும்பாபிஷேகம் நடந்தது.
33 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 6 மாதங்களாக கோயிலில் புனரமைப்பு பணிகள் நடந்தது. கோயில் சுற்று பிரகாரம், வசந்த மண்டபம், தூண்கள், கோயில் விமானங்களில் உள்ள சிற்பங்கள், கொடிமரம், சுவாமி உலா வரும் வாகனங்கள், பிரகாரம், சுவாமி விக்கிரகங்கள் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 1 ல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஆகம விதிப்படி பூஜைகள் நடந்த நிலையில் நேற்று காலை 9:30 மணிக்கு கருவறை விமானத்தில் புனித நீர் ஊற்றி பட்டர்கள் கும்பாபிஷேகம் செய்தனர். கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு வணங்கினர். பின்னர் பக்தர்களுக்கு கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மேல் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.