பதிவு செய்த நாள்
17
மார்
2023
03:03
வாலாஜாபாத்: சென்னை - கன்னியாகுமரி சாலை நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் இடையே, 41 கி.மீ., துாரத்திற்கு பணிகள் நடந்து வருகின்றன.
திருமுக்கூடல் பாலாறு ஓரமாக, ராட்சத ஹிட்டாச் வாகனத்தின் மூலமாக, நேற்று முன்தினம் மாலை பள்ளம் தோண்டும் பணி துவங்கியது. இதில், சுவாமி சிலை தட்டுப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புடன் ஆழமாக தோண்டியதில், லட்சுமி நரசிம்மர் சிலை எடுக்கப்பட்டது. இந்த சிலை, 5 அடி உயரமும், 3 அடி அகலம் உடையதாக இருந்தது. நரசிம்மர் கையில் சங்கு சக்கரமும், லட்சுமியின் தலை பாகமும் உடைந்த நிலையிலும் இருந்தது. வாலாஜாபாத் தாசில்தார் சுகபிரியா, சிலைகளை மீட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்து உள்ளார். இந்த சிலையை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.