பதிவு செய்த நாள்
29
மார்
2023
11:03
அவிநாசி: அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவில் பங்குனி தேர் விழா,தொடங்குகிறது. அவிநாசி ஒன்றியம்,கருவலூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவில்,மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தேர் விழா நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டுக்கான தேர் விழா,வருகின்ற 31ம் தேதி கிராம சாந்தியுடன், தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதி கோவில் கொடியேற்றுதல், இரவு சிம்மவாகனத்தில் அம்மன் எழுந்தருளுதல், 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் பூத வாகனம், ரிஷப வாகனம், புஷ்ப விமான மலர் பல்லாக்கு, திருக்கல்யாணம், யானை வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. ஏப்ரல் 5ம் தேதி காலை திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளல்,திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது . அதனையடுத்து 6ம் தேதி மற்றும் 7ம் தேதிகளில் திருத்தேர் பக்தர்களால் வடம் பிடித்து நிலை சேறுதல் நடைபெறுகின்றது. மேலும், 8ம் தேதி தொப்போற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, 9ம் தேதி அம்பாள் சப்பரத்தில் புறப்படுதல், மஞ்சள் நீராடுதல், கொடி இறக்கத்தை தொடர்ந்து 12ம் தேதி பாலாபிஷேகம், மறு பூஜையூடன் தேர் விழா நிறைவு பெறுகின்றது. பங்குனி தேர் விழாவை முன்னிட்டு,கோவில் விழா குழுவினர் மற்றும் உபயதாரர்கள் சார்பில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படும் என கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன் தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாட்டினை ஹிந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் குமரதுரை மேற்பார்வையில், உதவி ஆணையர் செந்தில்குமார்,செயல் அலுவலர் குழந்தைவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.