பதிவு செய்த நாள்
29
மார்
2023
11:03
உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நோன்பு சாட்டுதலுடன் நேற்று துவங்கியது.
உடுமலையில் நுாற்றாண்டுகள் பழமையான, மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டு தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். உடுமலை நகரம் மட்டுமன்றி, சுற்றுப்புறத்திலுள்ள நுாற்றுக்கணக்கான கிராம மக்களும் பங்கேற்கும், தேர்த்திருவிழா, நேற்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சூலத்தேவருடன், அம்மன் எழுந்தருளினார். மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாரம்பரிய முறைப்படி, தண்டோரா அடித்து, நோன்பு சாட்டுதல் குறித்து, அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திருவிழா நிகழ்ச்சிகள் குறித்து பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. வரும், ஏப்.,4ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, கம்பல் போடுதல் நிகழ்ச்சியும், 6ம் தேதி, இரவு, 12:00க்கு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு, கொடியேற்றுதல், மதியம், 2:00 மணிக்கு, பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி துவங்கி, 11ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. 12ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு, மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 13ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:45க்கு, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டமும் நடக்கிறது. 14ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், இரவு, 8:00 மணிக்கு, பரிவேட்டை, இரவு, 11:00 மணிக்கு, வான வேடிக்கை நிகழ்சிகள் நடக்கிறது. 15ம் தேதி, காலை, 8:15க்கு, கொடியிறக்கம், காலை, 11:00க்கு, மகா அபிேஷகம், பகல், 12:00க்கு, மஞ்சள் நீராட்டம், மாலை, 7:00 மணிக்கு, பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. திருவிழா காலங்களில், ஏப்., 7ம் தேதி முதல், தினமும், இரவு, 7:00 மணிக்கு, அம்பாள் புஷ்ப அலங்காரத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சிகளும், கோவில் வளாகம் மற்றும் குட்டைத்திடலில், ஆன்மிக கலை நிகழ்சிகளும் நடக்கிறது.