பதிவு செய்த நாள்
05
ஏப்
2023
08:04
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த மார்ச், 27ம் தேதி பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. கடந்த, ஏப்., 2ம் தேதி, திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோலாகலமாக நடந்தது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, காலையும் மாலையும் யாகசாலை பூஜையும், திருவீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு 10:00 மணிக்கு, பட்டீஸ்வரர் பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதன்பின், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமான தெப்ப தேரில் எழுந்தருளி, கோவில் தெப்பக்குளத்தில், 11 சுற்று வந்தனர். அதன் தொடர்ச்சியாக கோவிலை சுற்றி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.