திருத்தணி: திருத்தணி கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பக்தர்கள் காவடிகள் எடுத்தும், உடல் முழுதும் அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககிரீடம், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவில், 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் எடுத்தும், உடல் முழுதும் அலகு குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். நேற்று ஒரு லட்சம் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.