பதிவு செய்த நாள்
09
மே
2023
12:05
ஒவ்வொரு ஆண்டும் மே 18ல், போகர் ஜெயந்தி விழா, பழநியில் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும், பழநியில் போகர் ஜீவசமாதி இருக்கும் புலிப்பாணி ஆசிரமத்தில், விழாவை மிகச் சிறப்பாக நடத்த, ஆசிரமத்தை நிர்வகித்து வரும் ஸ்ரீமத் போகர் ஆதீனம் பாத்திரசாமி முயற்சி எடுத்து வருகிறார்.
இந்நிலையில், இந்தாண்டு புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் ஜெயந்தி விழாவை நடத்த, ஹிந்து அறநிலையத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது, போகர் புலிப்பாணி ஆசிரம பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.பழநி அறநிலையத் துறை இணை ஆணையர் நடராஜன், போகர் ஜெயந்தி விழாவை நடத்த, தடை போட்டு விட்டார். இந்நிலையில், விழாவை திட்டமிட்டப்படி நடத்த, அறநிலையத் துறை ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால், பெரும் போராட்டம் வெடிக்கும், என எச்சரிக்கை விடுத்திருக்கிறார், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார்.
பூஜைகள் நிறுத்தம்: இது குறித்து, அவர் கூறியதாவது:ஆன்மிக விஷயங்களில், ஏற்கனவே எந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறதோ, அதையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அதை மாற்றவோ, தடுக்கவோ கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் பழநியில் புலிப்பாணி சித்தர் ஆசிரமம் வாயிலாக நடத்தப்படும் போகர் ஜெயந்தி விழாவுக்கு, இந்தாண்டு இணை ஆணையர் தடை விதித்திருப்பது, சட்டத்துக்கும்- ஆன்மிக நடைமுறைக்கும் எதிரானது. பூஜை விவகாரங்களில் தலையிட, அறநிலையத் துறைக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. சித்தர் வழிபாட்டைக் கடைபிடிக்கும் பக்தர்கள் மத்தியில், இந்த தடை உத்தரவு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாத்திகர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு, அதல பாதாளத்துக்கு சென்று விடும் என கூறுவர். அதற்கேற்ப, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்புதான், கோவில்களில் தொன்று தொட்டு நடைபெறும் பூஜை முறைகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.பழநி கோவிலில் போகர் சன்னிதியை தொன்று தொட்டு புலிப்பாணி வாரிசுகள், முறையாக பூஜை செய்து தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தற்போது பாத்திரசாமி அப்பணியை செய்து வருகிறார்.
விதிமீறல்: போகர் சமாதியில், ஒவ்வொரு ஆண்டும் போகர் ஜெயந்தி விழா சிறப்பாக நடந்து கொண்டிருக்க, இந்தாண்டு திடுமென அதற்கு தடை போடுகின்றனர்.பழநி மலையில் அமைந்திருக்கும் போகர் ஜீவ சமாதியை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களுடைய காணிக்கையை செலுத்த, அங்கே உண்டியல் வைக்கவில்லை. அதனால், பழநி முருகன் கோவில் உண்டியலில் தான் காணிக்கை செலுத்துகின்றனர். இருந்தபோதும், போகர் சமாதியில் நடக்கும் போகர் ஜெயந்தி விழாவை தடுக்கின்றனர். இது சட்டத்துக்குப் புறம்பானது.போகர் ஜெயந்தி விழா நிறுத்தப்பட்டால், அதுவும் ஆகம விதிமீறல் தான். இப்படி ஆகம விதிமீறல் நடந்தால், அது ஆட்சிக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பது நம்பிக்கை. ஹிந்து விரோத அரசால், பழநி கோவில் மூலவரான தண்டாயுதபாணி சாமியை உருவாக்கிய போகருக்கும், இப்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், பழநி தண்டாயுத பாணி சாமியின் கோபத்துக்கு கட்டாயம் ஆளாக நேரிடும்.
நடவடிக்கை: இப்படியெல்லாம் செய்வதன் வாயிலாக, பழநி மலையில் இருக்கும் போகர் ஜீவ சமாதியையும், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் என நினைக்கின்றனர். கடந்த ஆண்டும், இதேபோல போகர் ஜெயந்தி விழா சிறப்பாக நடத்தக் கூடாது என்பதற்காக, இணை ஆணையர் நடராஜன் தொந்தரவு கொடுத்தார்.
போகர் ஜெயந்தி விழாவுக்கு தடை விதிப்புக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம். இந்த சட்ட விரோத காரியத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் துணை போகக் கூடாது. உடனே தலையிட்டு, இந்தாண்டும் வரும் 18ல், போகர் ஜெயந்தி விழாவை வழக்கம்போல் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால், பக்தர்களை கூட்டி மாபெரும் போராட்டம் நடத்துவதை தடுக்க முடியாது. கூடவே, சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்.இவ்வாறு ராம.ரவிக்குமார் கூறினார்.
ஆகம விதிகள் மீறப்படுவதால் அனுமதிக்க முடியாது; ஹிந்து அறநிலையத் துறை சார்பில், எதைச் செய்தாலும், அதை எதிர்ப்பதற்கென்றே, சில ஹிந்து அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தான், புலிப்பாணி ஜீவசமாதி ஆசிரம நிர்வாகி களை, அரசுக்கு எதிராக துாண்டி விடுகின்றன. போகர் சன்னிதியில் இருக்கும் விலையுயர்ந்த மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மன் உள்ளிட்ட விலை உயர்ந்த விக்ரகங்கள், பழநி தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமானவை. அதை பூசகர் என்ற அடிப்படையில், புலிப்பாணி ஆசிரம நிர்வாகிகளிடம் ஒப்படைத்து, பூஜை செய்யச் சொல்லி இருக்கிறோம்.கோவிலுக்கென்று சிறப்பான பூஜை விதிகள் உள்ளன. அவற்றை மீறி, போகர் ஜெயந்தி விழாவை கொண்டாட தீர்மானித்தனர். அதை அறிந்து, போகர் ஜெயந்தி விழாவுக்கு நிர்வாகத் தரப்பில் தடை ஏற்படுத்தி உள்ளோம். கோவில் ஆகம விதிகளுக்கு எதிராக நடக்கும் எந்த விழாவுக்கும் அனுமதி கிடையாது. இதற்கு எதிராக ஏதேனும் கோர்ட் உத்தரவோ, மேலிட உத்தரவோ இருந்தால் மட்டுமே, ஹிந்து அறநிலைய நிர்வாகத் தரப்பில் முடிவுகள் மாற்றிக் கொள்ளப்படும்.- -நிர்வாகி, பழநி தண்டாயுதபாணி கோவில்
சித்தர் வழிபாட்டை நிறுத்த சதி!ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு: போகர் ஜெயந்தி மற்றும் சித்தர் வழிபாட்டை நிறுத்த, ஹிந்து அறநிலையத்துறை சதி செய்கிறது என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது. அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:மே, 18ம் தேதி போகர் ஜெயந்தி நடக்க உள்ளது. இவ்விழா தொன்று தொட்டு பழநியில் ஆண்டுதோறும் புலிப்பாணி பாத்திரசாமியால் நடத்தப்படுகிறது. போகர் ஜீவசமாதி கோவில், புலிப்பாணி ஆசிரமம் கட்டுப்பாட்டில் தான் தற்போது வரை உள்ளது. ஆனால், இந்தாண்டு போகர் ஜெயந்தியை நடத்த ஹிந்து அறநிலையத் துறையும், பழநி இணை கமிஷனர் நடராஜன் என்பவரும் தடை விதித்துள்ளனர். இது, முற்றிலும் சட்டத்துக்கும், ஆன்மிகத்துக்கும் புறம்பானது.
பழநி கோவில் தண்டாயுதபாணியை உருவாக்கிய போகருக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால், தண்டாயுதபாணியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்; ஆட்சிக்கு ஆபத்தாக கூட நேரிடும் என்று ஆன்மிக வல்லுனர்கள் கூறுகின்றனர். உடனடியாக, தமிழக அரசும், ஹிந்து அறநிலையத்துறையும், பழநி தேவஸ்தானமும் வரும், 18ம் தேதி போகர் ஜெயந்தி பூஜையை, கடந்த ஆண்டை போல நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். - நமது நிருபர் -