பதிவு செய்த நாள்
17
அக்
2023
06:10
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ் பெற்ற அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஆதி கேசவ பெருமாள் கோவில் உள்ளது.
கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006 ம் இண்டு நடந்துள்ளது. கும்பாபிஷேகம் நடந்து சுமார் 17 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனையொட்டி, பக்தர்கள் சார்பில், கோவில் புணரமைப்பு செய்ய திட்டமிட்டு, சுப்பிரமணியம், என்பவர் தலைமையில் திருபணி குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி குழு சார்பில், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், 6 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆர்ச் அமைத்தல், 29 லட்ச ரூபாய் மதிப்பில் சொர்க்க வாசல் அமைத்தல், 5 லட்சத்து, 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வர்ணம் பூசுதல், கட்டடம் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல், உத்தம லிங்கேஸ்வரர் கோவிலில், 4 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சுற்று சுவர் புதுப்பித்தல், 9 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சன்னதி விமானம், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரை தளம் அமைக்க கோவில் நிர்வாகம் சார்பில், 94 லட்சத்து, 87 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. புணரமைப்பு பணி ஆறு மாதத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து. கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.