பதிவு செய்த நாள்
18
அக்
2023
01:10
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில், புதிய பார்லிமெண்ட் கட்டட திறப்பு விழாவில் தேவாரம் பாடிய உமா நந்தினியின் இசை நிகழ்ச்சி நடந்தது.
கோவை ஈஷா யோகா மையத்தில், கடந்த, 15ம் தேதி முதல் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும், நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் வகையில், நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான நேற்று, பக்தி நயம் ததும்பும் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. இதில், புதிய பார்லிமெண்ட் கட்டட திறப்பு விழாவில் தேவாரம் பாடிய உடுமலையை சேர்ந்த கல்லூரி மாணவி உமா நந்தினி, பல்வேறு தேவார பாடல்களை இன்னிசையுடன் கலந்து பாடி, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். இவர், சிறு வயதில் இருந்தே தமிழ் திருமுறைகளை பாடி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அதோடு, கொரோனா காலத்தில், 665 நாட்கள், 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு பாடி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி விழாவின், 4வது நாளான இன்று மாலை, 6:30 மணிக்கு, புராஜெக்ட் சம்ஸ்கிரிதி குழுவினரின் ஜுகல்பந்தி நிகழ்ச்சி நடக்க உள்ளது.