பதிவு செய்த நாள்
01
டிச
2023
02:12
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த கோயில் யானை சிவகாமிக்கு நினைவு மண்டபம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.
இக்கோயிலில் கோயில் யானை சிவகாமி கடந்த 2020 ல் இறந்தது. 50 ஆண்டுகளாக பக்தர்களின் மனம் கவர்ந்த அந்த யானைக்கு நினைவு சின்னம் வைக்க கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து அறநிலையத்துறை சார்பில் ரூ 49.5 லட்சம் மதிப்பில் விமானத்துடன் நான்கு கால் மண்டபம், மண்டபத்தினுள் யானை சிலை நிறுவ அனுமதியானது. யானை கட்டப்பட்டிருந்த மண்டபம் அருகில் மூன்றாம் பிரகாரத்தில் நினைவு மண்டபம் கட்ட முடிவானது. அதற்கான பூமி பூஜை இன்று காலை 10:15 மணிக்கு நடந்தது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தான ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் பூமிபூஜையை துவக்கி வைத்தார். பாஸ்கரக்குருக்கள் தலைமையில் கணேஷ் குருக்கள், ரமேஷ்குருக்கள்,ஹரி குருக்கள் யானை கட்டப்பட்டிருந்த மண்டபத்தில் கலச பூஜைகள் நடத்தி வாஸ்து பூஜை, பூமிபூஜையை நடத்தினர். தொடர்ந்து திருத்தளிநாதர், சிவகாமி அம்பாள், யோகபைரவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. ஆ.பி.சீ.அ.கல்வியில் கல்லூரி தாளாளர் ராமேஸ்வரன், அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி கமிஷனர் செல்வராஜ், நிர்வாக பொறியாளர் அனுராதா, பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், ஆய்வாளர் பிச்சுமணி, தேவஸ்தான நிர்வாகி நீலமேகம், பேஸ்கார் சந்திரசேகரன், கிராமத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பழனி கோயில் ஆஸ்தான ஸ்தபதி விஷ்வ மூர்த்தி தலைமையில் பணிகள் நடைபெற உள்ளன.