சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்; வனத்துறை அனுமதி மறுப்பால் ஏமாற்றம்.. கேட் முன்பு சூடமேற்றி திரும்பிச் சென்றனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2023 03:12
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, இன்று சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நீதிமன்ற உத்தரவின்படி நாளை (டிசம்பர் 17) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
புலிகள் காப்பகமாக இப்பகுதி அறிவிக்கப்படும் முன்பு வரை மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முதல் நாள் மலையேறும் பக்தர்கள் இரவு கோயிலில் தங்கி மார்கழி மாத பிறப்பு நாளன்று காலையில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய இன்று ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். ஆனால், அவர்களை வனத்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு சூடமேற்றி கோயிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி இன்று (டிச. 17) காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இரவு தங்க அனுமதி கிடையாது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.