70 ஆண்டுக்குப் பின்.. மேலாடையின்றி ராமேஸ்வரம் கோயிலில் சீர்பாதம் ஊழியர்கள் வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2023 05:12
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 70 ஆண்டுக்கு பின் பழமை மாறாமல் சீர்பாதம் தூக்கி ஊழியர்கள் மேலாடையின்றி தங்க பல்லாக்கை தூக்கி வலம் வந்தனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் திருக்கோயிலில் சுவாமி, அம்மன் தங்க பல்லாக்கில் வீதி உலா வருவார்கள். இதில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை இரவு 8:30 மணிக்கு மேல் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு, தங்க பல்லாக்கில் கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வருவார். இந்த பல்லாக்கை பாரம்பரியமாக ராமேஸ்வரம் பகுதி சேர்ந்த சீர்பாதம் தூக்கி ஊழியர்கள் தூக்குவது வழக்கம். 70 ஆண்டுகளுக்கு முன்பு சீர்பாதம் தூக்கும் ஊழியர்கள், ஆன்மிக மரபுகளை பின்பற்றி மேலாடையின்றி பல்லாக்குகளை தூக்குவது வழக்கம். ஆனால் காலப்போக்கில் நாகரீகம் என்ற பெயரில் மரபுகளை புறக்கணித்தனர்.
இந்நிலையில் பழமை மாறாமல் ஆன்மிக மரபுகளை பின்பற்றி பல்லாக்கை தூக்கினால் நன்றாக இருக்கும் என ஆன்மிக பெரியோர்கள் வலியுறுத்தினர். அதன்படி 70 ஆண்டுக்கு பின் முதன்முதலாக நேற்று இரவு பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லாக்கில் எழுந்தருளியதும், சீர்பாதம் ஊழியர்கள் 36 பேரும் மேலாடையின்றி, இடுப்பில் காவி துண்டு அணிந்து பல்லாக்கை தூக்கி பிரகாரத்தில் வலம் வந்தனர். இதனைக் கண்ட பக்தர்கள் சீர்பாதம் ஊழியர்களை பாராட்டினர்.