நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கண்டதேவி தேர் வெள்ளோட்டம்; பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2024 12:02
தேவகோட்டை; கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் நூறாண்டுகள் கழித்து நாளை அதிகாலையில் நடைபெறுகிறது. இதற்காக கோயிலிலும் , பாதுகாப்பு பணியிலும் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.
தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் ராமாயண கால புராண வரலாறு கொண்ட சிறிகிழிநாதர் என்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. அரசர் காலத்தில் இருந்து தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி என்ற நான்கு நாட்டைச் சேர்ந்த சுமார் 170 கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தலைமைக் கோயில். இக்கோயில் தேரோட்டம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும் . இத்திருவிழா மாங்கனித் திருவிழா என்றே அழைப்பர்.
தேரோட்ட பிரச்சினை: இக்கோயில் தேரோட்டத்தில் வடம் பிடிப்பதில் கருத்து வேறுபாடுகள் உருவானதால் சில ஆண்டுகள் தேரோட்டம் நின்று பின் சில ஆண்டுகள் ஓடியும் சில ஆண்டுகள் ஓடவில்லை. கும்பாபிஷேகம் , தேர்பழுது என காரணம் கூறி கடந்த 2006 ல் இருந்து தேரோட்டம் நடத்தவில்லை. இந்நிலையில் புதிய தேர் செய்யப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக ஓடாமல் நின்றது. பக்தர்கள் ஐகோர்ட் சென்றதால் நீதிபதி தேர் வெள்ளோட்டம் நடத்தும் படி கண்டிப்பான உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் வெள்ளோட்டம் விடுவதற்கான அனைத்து தரப்பையும் அழைத்து பேசினர். சிவகங்கை சமஸ்தானத்தின் பணியாளர்களை வைத்து வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் முழு சம்மதம் தெரிவித்தனர். பிப். 11 ந்தேதி நாளை அதிகாலை வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்தனர். வெள்ளோட்டம் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
மக்களின் ஆர்வம்: வெள்ளோட்டம் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேரோட்டம் ஆண்டுதோறும், ஊர்கள் தோறும் பார்க்கலாம். ஆனால் தேர் வெள்ளோட்டம் பார்த்து தரிசனம் செய்வது எப்போதாவது கிடைக்கும். 93 வயதான தலைமை பூஜகரே வெள்ளோட்டம் பார்த்ததில்லையாம். எனவே இக்கோயில் தேர் சுமார் 150, 200 ஆண்டுகளுக்கு முன் செய்து வெள்ளோட்டம் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த தலைமுறையில் வெள்ளோட்டம் யாரும் பார்க்கவில்லை . வெள்ளோட்டம் பார்ப்பதில் அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் எனவும் மக்கள் கருதுவதால் நாளை அதிகாலையிலேயே வெள்ளோட்டம் நடந்தாலும் தரிசிப்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: பல்லாயிரம் பேர் கூடும் நிலையில் வேகமாக பாதுகாப்பு பணிகள் நடைபெறுகிறது. இது வரை இல்லாத அளவில் தேரோடும் வீதியில் யாரும் நுழையாத படி கண்டதேவி கோயில், ஊரணியைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. எட்டு சந்திப்புக்களில் போலீஸ் செக்போஸ்ட் அமைத்து கண்காணிக்க படுகிறது. கோவில் அருகில் புறக்காவல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.