ஜோதிர்லிங்க தலமான ஸ்ரீசைலத்தில் வழங்கப்பட்ட புளியோதரையில் மாமிசம், எலும்பு; பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2024 01:02
ஆந்திரா; ஆந்திராவில் புகழ்பெற்ற ஜோதிர்லிங்க தலமான, ஸ்ரீசைலம் கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரை பிரசாதத்தில் மாமிசம், எலும்பு துகள்கள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. ஸ்ரீசைலம் - பக்தி ஞானம் உலகப்பற்றின்மை ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சைல சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 268 வது தேவாரத்தலம் ஆகும். நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில், நேற்று ஹைதராபாத்தை சேர்ந்த வேணுகோபால் என்ற பக்தர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவருக்கு கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரை பிரசாதத்தில் சிறிய அளவிலான இறைச்சி, எலும்பு துண்டுகள் இருப்பதை பார்த்து பக்தர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.