பதிவு செய்த நாள்
09
மார்
2024
10:03
காரைக்காலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மையார் குளத்தில் களிமண் சிவன்லிங்கம் வைத்து சிவநாம அர்ச்சனை செய்து சிவப்பெருமாளை பக்தர்கள் வழிப்பட்டனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் மற்றும் அவிநாசி வட்டாரத்தில் உள்ள சிவாலயங்களில், விடிய விடிய "ஓம் நமசிவாய கோஷத்தை பக்தர்கள் பாராயணம் செய்து, வழிபட்டனர். திருப்பூர் அருகே, நல்லூரில் உள்ள விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர், சுப்ரமணிய சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி சிறப்பு பூஜை, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு துவங்கியது. இரவு, 10:00 மணிக்கு, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல், அதிகாலை வரை, நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. வில்வம், தாழம்பூ, துளசி உள்ளிட்ட பூக்களால், அர்ச்சனை நடந்தது.
* எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை வரை, நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, மூலவர், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரருக்கு நடந்த அபிஷேகம், அலங்கார பூஜைகளில் பங்கேற்றனர்.
* திருப்பூர், டி.பி.ஏ., காலனி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி பூஜை, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு துவங்கியது. பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகமும், புது வஸ்திரங்களில் சுவாமிக்கு அலங்காரமும் நடைபெற்றது.