சிதம்பரம்; சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நேற்று மாலை துவங்கியது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழாவை நடராஜர் கோவிலில் நடத்தி வந்தனர். இந்நிலையில் நடராஜர் கோவிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து 2015-ம் ஆண்டு பொது தீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோவிலில் "தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட், சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்குவீதியில் வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்தி வந்தனர். நடராஜர் கோவிலில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கோவில் பொதுதீட்சிதர்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த துவக்க விழாவில், புதுச்சேரி இயல் இசை வல்லுனர் சுந்தரம் துவக்கி வைத்துப்பேசினார். அவர் பேசுகையில், இந்த நாட்டியாஞ்சலி நுாறு ஆண்டு காலம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றார். விழாவிற்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுத் தலைவர் டாக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் சம்பந்தம் வரவேற்றார். விழாவில் துணைத் தலைவர் நடராஜன், ராமநாதன், செயலாளர் சம்பந்தம், பொருளாளர் கணபதி மற்றும் உறுப்பினர்கள் கணபதி, சபாநாயகம், முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். டாக்டர் அருள்மொழிச்செல்வன் நன்றி கூறினார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழாவில் பங்கேற்ற வெளிநாட்டு பெண், நாட்டிய கலைஞர், பார்வையாளர் ஆகிய மூன்று பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.