பதிவு செய்த நாள்
09
மார்
2024
11:03
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அடுத்த குணமங்கலத்தில், பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா ஆகியோர், உளுந்துார்பேட்டை பகுதி யில், கள ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள குணமங்கலம் ஏரிக்கரையில், பலகை கல்லால் ஆன அய்யனார் சிற்பம் வழிபாட்டில் இருந்ததை அறிந்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, ராஜ் பன்னீர் செல்வம் கூறியதாவது: குணமங்கலம் ஏரிக்கரை யில் உள்ள பலகைக்கல்லால் ஆன 4 அடி உயரம், 3 அடி அகலமுள்ள அய்ய னார் சிற்பத்தை ஆய்வு செய்தோம். அதன் தலையின் உச்சியில், குமிழுடன் கூடிய கரண்ட மகுடம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நீண்ட காதுகளில் பத்ர குண்டலத்துடன், முகம் வட்டமாக உள்ளது. சிற்பத்தில் உள்ள மீசையின் மீது, சந்தனத்தால் பக்தர்கள் மீசை வரைந்துள்ளனர். கழுத்தில் பட்டையான சரப்பளி அணிந்துள்ளார். உத்குதிகாசன பீடத்தின் மீது அமர்ந்து, தன் இடது கையை பீடத்தின் மீது ஊன்றியும், இடது காலை மடித்தும் வைத்துள்ளார். வலது கையை ஊன்றிய காலின் மீது வைத்து, தொங்கவிட்ட நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். தோளிலிருந்து வலது காலைச் சுற்றி யோக பட்டையுடன், இடையாடை உடுத்தி, அதில் குறுவாள் ஒன்றைச் சொருகி அமர்ந்துள்ள, அய்யனாரின் கால்களின் அருகே ஆடும், நாயும், இடது தொடை அருகில் ஒரு சேவலும் நிற்கின்றன. வலது காலருகே ஒரு நீர் குடுவையும், நாயின் அருகே ஒரு நீர் குடுவையும் உள்ளன. அய்யனாரின் மேற்புற வலது பக்கத்தில், சிதைந்த நிலையில் குதிரையும், இடது பக்கத்தில் சாமரம் வீசும் பணிப் பெண்ணும், அதன் அருகே வணங்கிய நிலையில் சிதைந்த உருவம் உள்ளது. விழுப்புரம் பகுதியில் பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை, அய்யனார் சிலைகள் அதிகம் காணப்படுகின்றன. இதில், ஏராளமான சிற்பத் தொகுப்புகள் உள்ளது தனித்துவமானது. இந்த சிற்பத்தை பொறுத்தவரை, ஆடை, அணிகலன், சிற்ப வடிவமைப்பை வைத்து, 8ம் நுற்றாண்டில், பல்லவர் ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. மேலும், 1,200 ஆண்டுகளாக இது வழிபாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.