பதிவு செய்த நாள்
09
மார்
2024
11:03
மேட்டுப்பாளையம்; காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு ஈஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் காரமடை அரங்கநாதர் கோவில் அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை,7:30 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு பல்வேறு வகையான, திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 12:30 மணிக்கு பெள்ளாதி சங்கமேஸ்வரர் கோவிலில் பூஜையும், சனிக்கிழமை அதிகாலை, 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, காலை, 5:30 ஐந்து நான்காம் கால பூஜையும் நடைபெற உள்ளது. பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் அஸ்வின் சிவம், ஸ்ரீநாத் சிவம் ஆகியோர் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் எம்.எம்.ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, மாலை, 7:00 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது. அடுத்த இரவு 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை,4:30 மணிக்கு நான்காம் கால பூஜை, காலை, 6:00 மணிக்கு தீபாரதனையும், பேரொளி வழிபாடும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளையினர் செய்திருந்தனர். நகரில் பல்வேறு சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.