பதிவு செய்த நாள்
09
மார்
2024
01:03
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மஹா சிவராத்திரி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மாசி மாதம், அமாவாசைக்கு முன்பு வரக்கூடிய திரயோதசி மற்றும் சதுர்த்தசி திதிகள் சந்திக்கும் நாளில், பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் யார்? பெரியவர் என்ற அகந்தையை ஒழித்து, ஜோதிப்பிழம்பு மற்றும் லிங்கோத்பவர் வடிவில், அருணாசலேஸ்வரர் காட்சி கொடுத்த தலமான, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலையில் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து அதிகாலை 5:00 முதல், மதியம், 2:00 மணி வரை லட்சார்ச்சனை, இரவு, 7:30 மணிக்கு முதல் கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, நள்ளிரவு, 12:00 மணிக்கு சுவாமி மூல கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம், மறுநாளான இன்று அதிகாலை, (9ம் தேதி,) 2:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில், நேற்று இரவு பன்னிரு திருமுறை இசைக்கச்சேரி, நாதஸ்வர நிகழ்ச்சி, பரத நாட்டியம், சொற்பொழிவு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.