பதிவு செய்த நாள்
09
மார்
2024
12:03
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்தரை பெருவிழா, அன்னாபிஷேகம், திருக்கல்யாணம், நவராத்திரி, ஆருத்ர தரிசனம், பிரதோஷம், மகா சிவரத்திரி போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்நிலையில், மகா சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று இரவு துவங்கி, இன்று (09ம் தேதி) காலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், நேற்று இரவு 10:30 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12: 00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன. இதில், ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதையடுத்து, இன்று(09 ம் தேதி) காலை 5 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக, பிரதோஷத்தையொட்டி, மகா நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள்: மகா சிவராத்திரி விழாவையொட்டி, பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நேற்று மாலை 6:00 மணி முதல் மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், பரதநாட்டியம், நாத சங்கமம், பட்டி மன்றம், பக்தி இன்னிசை, தப்பாட்டம், கரகாட்டம், காளியாட்டம், காவடியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகள் என இன்று காலை 6:00 மணி வரை நடைபெற்றன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.