பதிவு செய்த நாள்
11
மார்
2024
03:03
சிதம்பரம்; சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா 3-ம் நாள் நிகழ்ச்சி தெற்குரதவீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நேற்று மாலை துவங்கியது. மார்ச்.8-ம் தேதி மகா சிவராத்திரியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா மார்ச்.12-ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுத் தலைவர் டாக்டர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். விழாவில் துணைத் தலைவர் நடராஜன், ராமநாதன், செயலாளர் சம்பந்தம், பொருளாளர் கணபதி மற்றும் உறுப்பினர்கள் கணபதி, சபாநாயகம், டாக்டர் அருள்மொழிச்செல்வன், முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நாட்டிய கலைஞர்களுக்கு பதக்கம் மற்றும் நினைவுப்பரிசினை வழங்கினர். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை புரவலர் கரியாலி ஐ.ஏ.எஸ்., எழுதிய ரிவைவல் ஆப் டெம்பிள் டேன்சிங் விங் என்ற நாட்டியம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. பாடகர் உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாட்டியாஞ்சலி விழாவில் நாட்டிய அஞ்சலி செலுத்தியவர்கள்: சென்னை ஜகதாலயா மாணவியர்கள் பரதம், கேரளா கங்கா லட்சுமி பரதம், பெங்களூர் த்ருஷ்டி கலை மைய மாணவியர்களின் பரதம், யு.எஸ்.ஏ.,திவ்யா சங்கரின் பரதம், சென்னை ஶ்ரீதேவி நிருத்யாலயா ருக்மணி கல்யாணம் குழுவினரின் நாட்டிய நாடகம், ஹைதராபாத் சுமாதுரா நுண்கலை மைய மாணவியர்களின் குச்சுப்புடி நடனம், சென்னை கிருபான நுண்கலை மைய மாணவியர்கள் மற்றும் சிதம்பரம் மகாலட்சுமி கலை பண்பாட்டு மைய மாணவியர்கள் ஆகியோர் பரதம்.