பதிவு செய்த நாள்
12
மார்
2024
11:03
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் வளாகத்தில், ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன் சார்பில், சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தனியார் அமைப்பினர் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என, பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால், பெரியகோவிலுக்கு வெளியே, மாநகராட்சிக்கு சொந்தமான கலையரங்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் தொல்லியல் துறை அங்கு நடத்திக் கொள்ள தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்தாண்டு நாட்டி யாஞ்சலி கலையரங்கத்தில் நடந்தது. ஆனால், தஞ்சை பெரியகோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற இருந்த நாட்டியாஞ்சலி விழாவுக்கு, தி.மு.க., அரசு அனுமதி மறுத்ததால், விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தன், சமூக வலைதள பக்கத்தில் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
இதுகுறித்து, தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு, தன் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் அளித்துள்ள விளக்கம்: தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்த அனுமதி மறுத்தது தி.மு.க., அரசு என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது வதந்தி. நாட்டியாஞ்சலி விழாவை தமிழக அரசு ரத்து செய்யவில்லை. நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை தான். மேலும், தஞ்சை பெரியகோவிலில் சிவராத்திரி தினத்தில், நிகழ்ச்சிகள் நடத்த இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகையால் தான், 20 ஆண்டுகளாக நடந்த நாட்டியாஞ்சலி, இந்தாண்டு கோவில் வளாகத்தில் நடைபெறவில்லை. எனவே, அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல. இவ்வாறு குழு விளக்கம் அளித்துள்ளது. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து தொடர்பாக, இந்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தையும், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டுள்ளது.