திருவாரூர் சுவாமிகள் நவகிரக கோட்டையில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2024 04:04
பல்லடம்; பல்லடம் வருகை தந்த திருவாரூர் மடத்தை சேர்ந்த சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பின், இவரது சீடராக இருந்த பஞ்சலிங்கேஸ்வரர், புதிய காமாட்சிபுரம் ஆதீனமாக பொறுப்பேற்றார். பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டை மடாதிபதியாகவும் இவர் உள்ளார். நேற்று திருவாரூர் சங்கரநாராயண மடத்தை சேர்ந்த சிவாஜி சந்தோஷ் சுவாமிகள், சித்தம்பலம் நவகிரக கோட்டைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது, மடத்தில் இருந்த பஞ்சலிங்கேஸ்வரரை மரியாதை நிமித்தமாக இவர் சந்தித்தார். சிவலிங்கேஸ்வரர் விட்டுச் சென்ற ஆன்மீக பணிகள் அனைத்தையும் அவர் அறிவுறுத்திய வழியில் சிரமேற்று செய்ய வேண்டும் என்று கூறிய திருவாரூர் சுவாமிகள், ஆதீனமாக பொறுப்பேற்ற பஞ்சலிங்கேஸ்வரருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.