திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த அம்மன் ரத ஊர்வலத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.
பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா மே29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவில் சர்வ அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி, பல்வேறு வாகனங்களில் திருக்குளத்தை வலம் வந்தார். ஐந்தாம் நாளன்று பால்குடமும், ஏழாம் நாளில் பொங்கல் விழாவும் நடந்தது. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு ரத ஊர்வலம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் உற்சவருக்கும் பல்வேறு தீபாரதனைகள் நடந்து அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதம், மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தெருக்களில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.