திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா ஐந்தாம் திருநாளை முன்னிட்டு திருத்தளிநாதருக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா மே 13ங் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி வெள்ளிக்கேடகம் அல்லது வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது. இன்று ஐந்தாம் திருநாளில் சோழிய வெள்ளாளர் உறவின்முறையார் மண்டகப்படியார் சார்பில் திருக்கல்யாணம் நடந்தது. கோயிலிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு சிவகாமி அம்பாள் பெண் அழைப்பாக திருவீதி புறப்பாடாகி மேலத்திருத்தளிநாதர் கோயில் எழுந்தருளினார். தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பாக திருத்தளிநாதர் திருவீதி வலம் வந்து மேலத்திருத்தளிநாதர் கோயில் எழுந்தருளினார். பின்னர் மணமக்கள் புறப்பாடாகி பெரியகோயில் வந்து ராஜகோபுரத்தின் கீழ் மாலை மாற்றினர். தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் வஸ்திரம் மாற்றி மணக்கோலத்தில் திருமண மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் யாகசாலை பூஜைகளை கணேசக்குருக்கள் துவக்கினார். பின்னர் ஸ்தானீகர் பாஸ்கர் குருக்கள்,ரமேஷ் குருக்கள் ஆகியோர் திருமண சடங்களை நடத்த, வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க திருத்தளிநாதருக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் காலை 10:25 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் முன்னிலை வகித்தார். தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது. திரளாக பெண்கள் பங்கேற்று திருக்கல்யாணத்தை தரிசித்தனர். பின்னர் திருமுருகன் மண்டபத்தில் திருமண விருந்து நடந்தது. முன்னதாக தென்மாப்பட்டு வேலாயுத சுவாமி கோயில் மடத்திலிருந்து கல்யாண சீர்வரிசைகளை பக்தர்கள் எடுத்து வந்தனர். இரவில் பூப்பல்லக்கில் சுவாமி,அம்பாள் எழுந்தருளி திருவீதி வலம் வந்தனர். நாளை சிறுகூடல்பட்டி மு.பழ. வகையறா மண்டபடி தீபாராதனையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். மே 21ல் தேரோட்டமும், மே22 ல் தெப்ப விழாவும் நடைபெறும்.