சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் தேரோட்டம்; வானுயர பறந்த சிதறு தேங்காய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 05:05
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டத்தையொட்டி மக்கள் வெள்ளத்தில் தேர் பவனி வந்தது.
சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 12ம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக தினமும் சுவாமி புறப்பாடு நடந்தது. 6ம் திருவிழாவன்று சமணர்களைக் கழுவேற்றிய நிகழ்வை நினைவு கூறும் வகையில் கழுவன் திருவிழா நடந்தது. 9ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. காலை 10:30 மணிக்கு பூரணை புஷ்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் திருத்தேரில் எழுந்தருளினார்.தொடர்ந்து மாலை வரை பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை வழிபட்டனர். மாலை 3:30 மணிக்கு சந்திவீரன் கூடத்திலிருந்து சிங்கம்புணரி நாட்டார்கள் ஊர்வலமாக வந்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். விநாயகர் சப்பரம் முன்னேயும், அம்மன் சப்பரம் பின்னேயும் வர 4:15 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேர் புறப்பட்டது. 4:50 மணிக்கு பாரம்பரிய முறைப்படி கழுவன் கழுவச்சி சிலைகள் மீது தேர் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நிலையை அடைந்தது. அப்போது சுற்றியிருந்த பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக தேங்காய்களை தேரடிப்படியில் சரமாரியாக வீசி எறிந்து உடைத்தனர். உடைந்த தேங்காய்களை பலர் பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்து கொண்டு சேகரித்தனர். தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம், நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்திருந்தனர். திருப்புத்தூர் டி.எஸ்.பி , ஆத்மநாதன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 10 ம் திருவிழாவான நாளை பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.