பதிவு செய்த நாள்
23
மே
2024
12:05
புதுச்சேரி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கதிர்வேல் சுவாமி கோவிலில் சுவாமிக்கு 108 பால் குடம் அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
கதிர்காமத்தில் பிரசித்திப் பெற்ற, கதிர்வேல் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, சுப்ரமணிய சுவாமி அவதார நட்சத்திரமான வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று காலை, 108 சங்குகள் ஸ்தாபனம் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால் குடங்கள் மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கதிர்வேல் சுவாமி கோவிலை அடைந்தது. பின், சுவாமிக்கு 108 பால் குடம் அபிஷேகம், கலசாபிஷேகம், 108 சங்காபிேஷகம் நடந்தது. பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சுவாமி பிரகார உற்சவம் நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், ஆறுமுகம், சிறப்பு வழக்கறிஞர் (என்.ஐ.ஏ.,) பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாக அதிகாரி இளங்குமரன், உபயதாரர் கிருஷ்ணமூர்த்தி, நக்கீரன், முருகேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.