பதிவு செய்த நாள்
01
ஜூன்
2024
08:06
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சக்தி காளியம்மன், முத்தாலம்மன், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கழுமரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் முன்னதாக மே.14 சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை பூஜைகள் நடந்தது. மே.29 சக்தி காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் சாமிகள் கரகங்கள் ஜோடிக்கப்பட்டு முளைப்பாறியுடன் கோவில் வந்தடைந்தது. தொடர்ந்து மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேரத்தி கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். மாலை பாரி வேட்டை நிகழ்ச்சியில் கிராம இளைஞர்கள் பாரம்பரிய முறைப்படி மேல் சட்டை அணியாமல் தலையில் மலர்களை சூடி, கையில் வேல் கம்புடன் , எதிரே புலி வேஷம் அணிந்த இளைஞரை வேட்டையாடுவது போல் பாவனை செய்தனர். விழாவில் நேற்று முன்தினம் முத்தாலம்மன் கரகம் ஜோடித்து வானவேடிக்கையுடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து தீச்சட்டி எடுத்து பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் முக்கிய நிகழ்வாக கழுமரம் ஊண்டப்பட்டு அதில் கிராம இளைஞர்கள் போட்டி போட்டு இலக்கை அடைந்தனர். இதில் முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இன்று மாலை அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.