பதிவு செய்த நாள்
07
ஜூன்
2024
02:06
பல்லடம்; பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில் பிரசித்தி பெற்ற பொங்காளி அம்மன் கோவில் உள்ளது. தற்போது கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து தேதி இன்னும் தீர்மானிக்கப்படாத நிலையில், நேற்று, கோவில் விழா குழுவினர் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். முன்னதாக, தீப ஸ்தம்பம் நடுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை தொடர்ந்து, ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியதாவது: பொங்காளி அம்மன் கோவில், குறிப்பிட்ட சில சமூகத்துக்கு சேர்ந்தது என்பது மட்டுமன்றி, வட்டாரத்தில் உள்ள, 350க்கும் மேற்பட்ட கிராம மக்களும் இக்கோவிலில் வழிபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில், கோவில் தேர்த்திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் இங்கு கோலாகலமாக நடந்துள்ளன. பின்நாளில், கோவிலை சரிவர நிர்வகிக்காததன் காரணமாக, கோவிலின் வளர்ச்சி குறைந்துள்ளது. நீண்ட காலத்துக்குப் பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்துள்ளோம். இதனை மிக விமரிசையாக கொண்டாட வேண்டும். அடிக்கடி தேதியை மாற்றுவதால், பக்தர்கள் குழப்பம் அடைவதுடன், ஏமாற்றத்தை சந்திக்கின்றனர். இனி தேதியை தீர்மானித்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க கூடாது. கும்பாபிஷேக பணியில் பொதுமக்களையும் அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்ட முடிவில், டிச., 5ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், இது குறித்து அறநிலையத்துறையில் ஒப்புதல் பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.